Hari Krishnamurthy's blog

Saturday 21 April 2012

எதற்கு பிச்சை எடுப்பது



எதற்கு பிச்சை எடுப்பது?

,

   ளவையார் ஐயமிட்டு உன் என்றும் சொல்கிறார்.  ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்கிறார்.  இதில் எதை ஏற்றுக்கொள்வது? எதை விடுவது?

எனது பூர்வாசிரமக் காலத்தில் ஒரு நண்பர் இருந்தார்.

 அவரிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே கிடையாது.  போதை வஸ்துக்களில் கஞ்சா, மரியுவானா, பிரவுன் சுகர், பெத்தடின் போன்றவைகளும் புகையிலை, பான்பார்க், பான்கோலி போன்றவைகளும் சீட்டாட்டம், ஆபாச நடனம், தவறான பெண் சேர்க்கை என்று இன்னும் என்னென்னவோ கெட்டப்பழக்கத்தின் பட்டியலில் நீளும்.

  ஆனாலும் அவருக்கு ஒளவையாரின் படைப்புகள் மீது அபாரமான காதல் உண்டு.

 வார்த்தைக்கு வார்த்தை ஒளவையாரின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவார்.


   ஒரு சமயம் அவரிடம் ஓளவையாரை பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே அவர் சொன்னபடி ஓரளவாவது நடக்க முயற்சி செய்ய கூடாதா என கேட்டேன்.

  அதற்கு அவர் முற்றிலுமாக நான் ஒளவையார் சொல்ப்படித்தான் நடக்கிறேன்.  அவர் கட்டளையிலிருந்து ஒரு சிறிது கூட பிசகியது இல்லை என்றார்.

 எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது.  குடிகாரன் என்பவன் கூட அதில் மட்டும் தான் அடிமையாக இருப்பான்.  ஆனால் இவர் மது, மாது, சூது என எல்லாவற்றிற்க்கும் அடிமை பிறகு எப்படி இவர் ஒளவையார் சொல்படி நடக்கிறேன் என்கிறார் என்பது எனக்கு விளங்கவில்லை.

  அதற்கான விடையை அவடரிமே கேட்டேன்.


 பலமாக சிரித்த அவர் ஒளவையார் என்ன சொன்னார்.  அறம் செய்ய விரும்பு என்றார், ஆறுவது சினம் என்றார், ஊக்கமது கைவிடேல் என்றார் இப்படி எல்லாம் சொல்லிய அவர் கடைசியில் தையல் சொல் கேளேர் என்றார்.

  பெண் சொல்படி நடக்க கூடாது என்றால் ஒளவையாரும் பெண் தானே, பின் எதற்காக அவர் சொல்லிய படி வாழ வேண்டும் என்று எனக்கு விளக்கம் சொன்னார்


  இப்படி  அனர்த்தன வியாக்கியானம் செய்து கொண்டிருப்பவர்கள் நமது நாட்டில் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

  ஆனால் ஒளவையார் எந்த இடத்திலேயும் தவறுதலான கருத்தை சொல்லியது கிடையாது.

  உடலை வளைத்து உழைக்க முடியாத பரிதாபமான பலர் நம்மில் உள்ளனர்.

  ஒரு பிடி சோற்றுக்கு அடுத்தவர்களை எதிர்பார்த்து தான் வாழ வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உள்ளது.

  உடல் ஊனமுற்றவர்களாவது தங்களுக்கு ஏற்படும் தாகத்தை எந்த வகையிலாவது வெளிபடுத்தி விடுவார்கள்.

 ஆனால் தனக்கு பசிக்கிறதா நோய் இருக்கிறதா என்பதை கூட உணர முடியாத மன நோயாளிகளை ஏற்பது இகழ்ச்சி என சொல்லி பட்டினி போட்டு விட முடியுமா?

இவர்களுக்கெல்லாம் எந்த பொதுவுடைமை சட்டம் வந்தாலும் நாம் தான் கொடுக்க வேண்டும். 


  அவர்களால் தங்களை காப்பற்றிக் கொள்ள முடியாது என்பதை ஒளவையார் நன்கு உணர்ந்து ஐயமிட்டு உண் என்றார்கள். 

  உடலில் நல்ல பலமிருக்கிறது அல்லது நல்ல மூளை பலம் இருக்கிறது என்றால் நிச்சயம் அவர்களால் உழைக்க முடியும். 

  ஆனால் உழைப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு ஊதாரிதனமாக சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மற்றவர்களிடம் கை நீட்டி நிற்பது எத்தகைய அவமானம் என்பதை உணர்த்த வேண்டும்.

 அதற்காக தான் ஏற்பது இகழ்ச்சியென ஒளவையார் சொல்கிறார்.

  இங்கே இன்னொரு கேள்வி வரும்.  ஏற்பது இகழ்ச்சி என்றால் உலகத்தை படைத்த கடவுளான சிவபெருமானே பிச்சையெடுத்துயிருக்கிறாரே அதையேன் நாம் பின்பற்ற கூடாது என்று கேட்பவர்களும் உண்டு

  சிவபெருமான் பிச்சையெடுப்பது உழைக்க முடியாததாலோ உண்பதற்கு சோறு இல்லை என்பதற்காவோ அல்ல.  


   ஒவ்வொரு மனித மனமும் அகங்காரத்தால் நிரம்பியதாகும்.  தான் என்ற அகங்காரத்தை துறப்பதே உண்மையான துறவு ஆகும்.

  துறவியாக இருப்பவன் உணவுக்காக உழைக்க ஆரமித்தான் என்றால் அவன் எந்த அகங்காரத்தை துறந்தானோ அது தானாக வந்து ஒட்டிக் கொள்ளவும் கூடும்.

 தனக்கு சொந்தமான பொன்னையும் பொருளையும் உதறிவிட்டு அடுத்த வேளை சோற்றுக்கு கையேந்தி நிற்கும் போது கூட மனம் கவலைப்படாமல் இறைவன் பால் நிற்க வேண்டும்.

 அது தான் நிஜமான துறவு ஆகும் என்பதை காட்ட தான் சிவபெருமான் பிச்சையாண்டியாக திரிந்தது.

 படி அளக்கும் பரமசிவனே படிப்படியாக ஏறி பிச்சை எடுக்கும் போது  துறவு வாழ்க்கையில் ஏற்பது இகழ்ச்சியானது அல்ல 

ஆனால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏராளமான சோம்பேறிகளும், உதவாக்கரைகளும், பேராசைகாரர்களும், காவியாடை உடுத்தி துறவிகள் என்ற போர்வையில் நாட்டில் அலைகிறார்கள்.
 



No comments: